Pages

Monday, December 31, 2012

எல்லாம் வல்ல பகுத்தறிவு துணை நிற்பதாக !

தமிழ் நாட்டு அரசியல் பற்றிப்  பேசலாம் என்றால் அது கருணாநிதி அல்லது ஜெயலலிதா பற்றி தான் இருக்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத விதி நம் தமிழ் மீடியாவில் உள்ளது. அதனால் நமது எண்ணப்பதிவுகளை இங்கே பதிவு செய்கிறோம்.

 இது நாள் வரை ஆங்கிலத்தில் எழுதி வந்தேன். அது சரியான மக்களை சென்று அடைய வில்லை என்று சில காலமாகவே ஒரு எண்ணம். அதுவும் தமிழ் மட்டுமே பேசுகிற மக்களை அடைவதில்லை  என்ற உண்மை மிகவும் வருத்தம் அளித்தது. தமிழ் நாட்டு மக்களுக்கு சரியான ஆங்கிலம் தெரியவில்லை என்பது தமிழ் நாட்டின் கல்வி முறையின் ஒரு சாதனை என்று தான் சொல்லன் வேண்டும்.

தமிழ் நாட்டில் கல்வி முறையில் 1967 குப்பின் நடந்துள்ள அடிப்படை மாற்றங்கள் மற்றும் அதனால் உண்டான சமுதாய மாற்றங்கள் பற்றி பேச வேண்டும் என்றால் கூட அதுவும் அந்த  காலகட்ட அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு நிகழவே என்று நாம் அறிய வேண்டி உள்ளது. அதனால் கல்வி பற்றி பேசினால் அது அரசியல் தொடாமல் இருக்க முடியாது என்பது தெளிவு.

ஏன் என்றால், திராவிட ஆட்சியாளர்கள் மிகச்சரியாக கல்வி முறையில் மாற்றம் செய்து அதனால் இரண்டு  தலைமுறை மக்களை பகுத்தறிவு இல்லாத வெறும் உடம்புகள் ஆக்கி, சிந்திக்கும் திறன் இல்லாத ஒரு கூட்டத்தை உருவாக்கி உள்ளர்கள்.

மக்களுக்கு பொழுது போக்கும்  வாழ்க்கையில் ஒரு அம்சம் என்ற எண்ணம் போய் . அதுவே வாழ்க்கை  என்று எண்ணி சினிமாவின் பின்னால் ஆடு மாடுகளை போல் அலைய வைத்து விட்டார்கள் என்று சொன்னால் அதில்  தவறு இல்லை.

தமிழ் நாட்டில் கலை என்று ஒன்று இருந்தது. அது நாடகம், பாடல், சொற்பொ ழிவு மற்றும் பட்டி மன்றம் என்று பல வகை பட்டது. ஆனால் தற்போது கலை என்பதே சினிமா என்றும், கலைஞர் என்றாலே அது சினிமா கதா நாயகிகள் மற்றும் நாயகர்கள் என்று ஆக்கி உள்ளது நமது திராவிட ஆட்சிகளின் மிகப்பெரிய வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

பட்டி மன்றம் என்றால் சங்க இலக்கியங்கள் பற்றிய ஒரு சொற்போர் இருக்கும். பட்டி மற்ற பேச்சாளர்கள் சிறந்த கல்வி மான்களாக இருப்பார்கள். கம்பன், பாரதி, சிலம்பு, புரனானூரு என்று மேற்கோள் எடுத்து வைக்கப்படும். தற்போது வாலியும் வைரமுத்துவும் மேற்கோள் காட்டப் படுகிறார்கள். சி லேடையாகப் பேசுவது ஒரு நயம். ஆனால் அதுவே பேச்சு முழுவதும் இருப்பது ரசிக்கமுடியவில்லை.பட்டி மன்றம் என்ற பெயரில் பண்பாட்டுச்  சீரழிவு நடை பெறுகிறது.

ஒரு பொங்கல் திருநாள் அல்லது ஒரு தீபாவளி திருநாள் வந்து விட கூடாது. அன்று முழுவதும் மக்களை ஆடு மாடுகளை கட்டிப்போடுவது போல்  டிவி பெட்டி முன் அமர வைக்கும் ஒரு பண்ணபட்டு வீழ்ச்சி நாம் கண்டு கொண்டு இருக்கிறோம்.அதிலும் ஒரு 16 வயது நிரம்பாத பெண் நடிகை, நமக்கு எல்லாம் தமிழ் கலை உலகின் இளம் சுடர் என்ற போர்வையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வாள். அதையும் நாம் வெட்கம் இல்லாமல் குழந்தை முதல் கிழவர் வரை வாய் திறந்த படி பார்த்து மகிழ்கிறோம்.இந்த அழகில், "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழ்க்குடி " என்று பெருமை வேறு. என்ன ஒரு பண்பாட்டு வீழ்ச்சி ?

தமிழ் நாட்டில் சினிமா தவிர ஒன்றுமே இல்லையா ? ஒரு தொழில் முனைவோர் இல்லையா ? ஒரு மென்பொருள் ( சாப்ட்வேர் ) திறமையாளர் இல்லையா ? இவர்கள் எல்லாம் சாதனை செய்யவில்லையா ? உதாராணமாக என் நண்பன் நாமக்கல் மாவட்டம் வெலகௌண்டம்பட்டியில் ஒரு எளிய விவசாயகுடும்பத்தில் பிறந்து இன்று ஆஸ்திரேலியாவில் மிக நல்ல நிலையில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறான்.இவன் சாதனையாளன் இல்லையா ? அல்லது இவனைப்போன்றவர்கள் தமிழர்கள் இல்லையா ? இன்னொரு நண்பனின் தந்தை தேநீர் கடை வைத்து இருந்தார். தற்போது அந்த நண்பன் அமெரிக்காவில் ஒரு மென்பொருள் நிறுவனம் நடத்துகிறான். இவர்கள் இருவரும் கல்லூரியில் சேரும் பொது ஆங்கிலம் அறியாதவர்கள்.ஆனால் அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள். இவர்கள் சாதனையாளர்கள் இல்லையா அல்லது தமிழர்கள் இல்லையா ? இவர்களின் வாழ்க்கை மற்ற தமிழர்களுக்குப் போய்ச் சேர வேண்டாமா ?

இன்று குமரிக்கண்டம் என்று சொன்னால் அதை எவ்வளவு பேரால் உணர்ந்து கொள்ள முடியும் என்று தெரிய வில்லை. யார் அந்த குமரி என்று வேண்டுமானால் கேட்பார்கள் போலும்.  அந்த அளவுக்கு தமிழ் அறிவு வளர்ந்து உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் இந்த அளவுக்கு கலாசார வீழ்ச்சி இல்லை என்று அறிகிறோம்.

இன்று கலை என்ற பெயரில் சின்னஞ்சிறு பிள்ளைகளை சினிமாவில் அரை குறை ஆடையுடன் பெண்கள் ஆடுவது போல் ஆட வைத்து மகிழ்கிறார்கள். இந்த அரை குறை ஆடை அலங்காரத்தை டிவி இல் பார்த்து குதூகுலம் வேறு. அதைவிட அலங்கோலம் அந்த குழந்தைகள் தங்கள் தாய் தந்தையரை மம்மி டாடி என்று அழைப்பது. அது தான் இன்று நாகரிகம் என்று போற்றப்படுகிறது.

 ஒரு பத்து  திருக்குறள் தெரியவில்லை குழந்தைகளுக்கு. இதில் தமிழன் என்று வாய்க்கு வாய் சொல்லிகொள்வதில் ஒரு குறைவும் இல்லை.

ஜாதி இல்லை என்று ஊருக்கு ஊர் எழுதி வைத்துவிட்டுப்  பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை ஜாதி இல்லாத இடமே இல்லை. இதில் பெரியார் வழியில் அண்ணா  வழியில் அம்பேத்கர் வழியில் ஜாதியை ஒழித்து விட்டோம் என்ற  இறுமாப்பு ஓய்ந்த பாடு இல்லை.

தற்போது கல்வி முறையில் சமச்சீர் கல்வி என்று ஒரு புது கோமாளி வேறு. இதில் திருக்குறளை மனப்பாடம் செய்ய வேண்டாமாம். ஏன் என்று கேட்டால் கல்விச் சீர்திருத்தம் அன்று சொல்கிறார்கள். ஆனால் சினிமா பாடல்களை சிறுவர்கள் மனப்பாடம் செய்யலாம். அது தான் பகுத்தறிவு போலும்.

கம்ப ராமாயணம், திருப்பாவை, திருவெம்பாவை முதலியன ஒழிக்கப்பட  வேண்டிய ஒன்று ஆனால் சினிமா பாடல்கள் ஒலிகப்படவேண்டிய ஒன்று. இப்படித்தான் இருக்கிறது நமது தமிழ் நாட்டுக்கல்வி நிலை.

மக்கள்  குடி நீருக்காக பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டும். ஆனால் "குடி மகன்கள்" எந்த கஷ்டமும் இல்லமால் கடை தெருக்களில் உற்ச்சாக பானம் அருந்த அரசாங்கமே வழி செய்து கொடுக்கிறது. பள்ளிகளில் கழிவறை கட்டி தர இந்த அரசாங்கங்களுக்கு அருகதை இல்லை. "டாஸ்மாக்" என்ற பெயரில் சாதராண மக்களை அழிவுப் பாதையில் கை பிடித்து அழைத்துச்செல்கிறது அரசு. இது என்ன பகுத்தறிவு என்று தெரியவில்லை.

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு "  என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார். ஆனால் இந்த வள்ளுவரை யார் அறிந்து இருக்கிறார்கள் ? "வாழும் வள்ளுவரை " மட்டுமே நம் தமிழர்கள் அறிந்து வைத்து இருக்கிறார்கள்.  "டாஸ்மாக்" மூலமாக அரசாங்கத்துக்கு வருமானம் வருகிறது என்று தம்பட்டம் வேறு. இதை விட ஒரு வெட்கக்கேடு வேறு ஒன்று உண்டா ?

"தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை" என்று பெரியார் சொன்னதாலோ என்னவோ ,7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கு 15 வரிகளில் தமிழில்  ஒரு கட்டுரை எழுத முடியவில்லை. ஆங்கிலத்தில் ஒரு வரி சரியாக பேச முடியவில்லை. இவர்கள் தமிழ் நாட்டை ஆண்டு தமிழை வளர்த்த  லட்சணம் இது தான்.

டெல்லியில் தமிழன் என்றால் அலைக்கற்றை விவகாரம் ( 2G ) என்று ஏளனம் செய்யும் நிலை.

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்ற நிலை போய் தற்போது தமிழன் என்றாலே ஒருவித சங்கோஜத்துடன் நெளிய வேண்டிய நிலை. இது தான் "கல் தோன்றி மண் தோன்றா ..." என்பதன் லட்சணமா ?

"அரசியல் பிழைத்தாற்கு அறம் கூற்றாகும் " என்பது முது மொழி. இன்றோ அறம் இல்லாமல் இருப்பவரே அரசியலில் ஈடுபடுகிறார்கள். கல்வியில் மாற்றம் புகுத்துகிறார்கள். தலைமுறைகளையே சீரழிக்கிறார்கள்.

இது தான் இன்றைய தமிழ் நாட்டின் நிலை. இந்த இழி நிலை மாற வேண்டாமா ? இன்னும் எத்தனை காலம் தான் இந்த பண்பாடு அற்ற நிலை ?

நிலைமை இவ்வாறு இருக்க, தமிழர்களாய் இருக்கும் நாம், இவற்றை எல்லாம் மறந்து விட்டு, "மானாட மயிலாட" கண்டு, ஆங்கிலபுத்தாண்டு கொண்டாடி தமிழை வளர்ப்போமாக.

எல்லாம் வல்ல பகுத்தறிவு துணை நிற்பதாக !


1 comment:

  1. DEAR SIR, EVEN THIS PURE TAMIL OF YOURS WOULD NOT BE UNDERSTOOD BY EVEN THE SO CALLED EDUCATED PEOPLE IN T.N. HOWEVER YOUR TREATISE IS AN EYE OPENER. LET ME PRAY LORD NARAYANA TO DO GOOD IN THE COMING 2013.ALSO WISHES TO YOU AND YOUR FAMILY ON THE ENGHLISH NEY YEAR.HARINIS FATHER.

    ReplyDelete