Pages

Tuesday, January 1, 2013

இந்துதுவாவிடமிருந்து தமிழகத்தை காப்பாற்றுவது எப்படி ?


தமிழர் என்று ஒரு இனம் உண்டு தனியே அதற்கு ஒரு மொழி உண்டு என்று சொல்லி தமிழ் நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் இந்து மதம் ஒரு பார்ப்பன ஏகாதிபத்திய திணிப்பு என்று கூறி அதனால் இந்து மதம் பற்றிய ஒரு விதமான காழ்ப்புணர்ச்சியை மக்கள் மத்தியில் உண்டாக்கி இருக்கிறார்கள் .இந்த நிலையில் திருக்குறள் இந்து மதம் பற்றி என்ன கூறுகிறது என்று பார்ப்பது ஒரு தெளிவான கண்ணோட்டத்தை அளிக்கும் என்பதால் நாம் திருக்குறளை சற்று உற்று நோக்குவோம்.

( வாசகர்கள் நினைவிற்கு : திருக்குறள் என்பது ஒரு நாத்திக நூல் அல்ல. 
 திருக்குறளை நம் ஆன்மீகவாதிகள் மேற்கோள் காட்டுவது இல்லை என்பதாலும், நாத்திகம் பேசுவதாகக்கூறுபவர்கள் மேற்கோள் காட்டுவதாலும் நாம் திருக்குறளை ஒரு நாத்திக நூல் என்று நினைத்தால் அது நமது தவறு தான். அதை ஒரு நாத்திக நூல் போல் சித்தரித்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ள திராவிட ஆட்சியாளர்களை மன்னித்து மேலே தொடர்வோம் )

கீழே ஆராயப்போகும் திருக்குறள்கள் தமிழ்நாட்டுப்பாடநூல்களில் கிடைக்காது. இவற்றைப்பற்றி தமிழ் அறிஞர்கள் என்ற போர்வையில் உலாவி வரும் பகுத்தறிவாளர்கள் பேச மாட்டார்கள். ஈவேரா பெரியார் திருக்குறளை ஒரு ஆரிய திணிப்பு என்று கண்டுபிடித்தார். ஆனால் பெரியார் வழி வந்துள்ள பகுத்தறிவாளர்கள் இதைப்பற்றியும் பேச மாட்டார்கள்.

 தமிழ் நாட்டைப்பொறுத்தவரை பெரியார் , அண்ணாதுரை மற்றும் அவர்களது எண்ணங்கள் பற்றிப்பேசுவதும்  எழுதுவதும் பார்ப்பனீய ஆதிக்க சக்திகளின் கைகளை வலுப்படுத்தும் என்று அவற்றைப்பற்றியே பேசாமால் இருப்பது தான் பகுத்தறிவு.

நமக்குப்பகுத்தறிவு இல்லை என்பதால் திருக்குறளில் இந்து மதம் பற்றி என்ன தகவல்கள் உள்ளன என்று சற்று ஆராய்வோம்.

திருக்குறளில் கடவுள்கள் பற்றி உள்ளன என்பதை விட அதில் இந்து மதக்கடவுள்கள் பற்றியும் இந்து மத நம்பிக்கைகள் பற்றியும் அம்மதத்தின் சில ஆணிவேர் போன்ற எண்ணங்கள் பற்றியும் பல செய்திகள் உள்ளன.


கடவுள் பற்றி வள்ளுவர்  :

"கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாள் தோழாஅ ரெனின்"
- எவ்வளவுதான் கற்றிருந்தாலும், கடவுளைத்தொழாமல் இருந்தால் கல்வியால் என்ன பயன் ? 

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்
- மலரின்மேல் அமர்ந்துள்ள கடவுள் - பிரம்மா - அடி சேர்ந்தார் இவ்வுலகில் நீடூழி வாழ்வார் 

"அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது"

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்"

- அறவாழி அந்தணன் - பாற்கடலில்  பள்ளி கொண்டுள்ள கடவுள் அடி சேர்ந்தார்க்கு பிறவிக்கடலை நீந்துவது எளிது. அல்லார்க்கு அரிது .  

"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை
- இங்கே எண்குணத்தான் என்பது 8 குணங்களை உடைய சிவ பெருமானைக்குறிக்கிறது. சிவ பெருமானுக்கு 8 குணங்கள் உள்ளன என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. 

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்
- ஒருவன் பிச்சை வாங்கித்தான் உயிர் வாழ வேண்டும் என்றால் இந்த உலகை உண்டாக்கியவன் அழியட்டும் 

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப்படும்"
- இறைவன் பாற்கடல், தேவ மற்றும் பிரம்மா லோகங்கள் முதலான இடத்தில் இருப்பதாக இந்து மதம் அறிவிக்கிறது. இந்த செய்யுளில் பூவுலகில் நன்மை  செய்தால் வானுலகில் தெய்வத்தின் அருகில் இருக்கலாம் என்று அறிகிறோம். 

"வகுத்தான் வகுத்த வகைஅல்லால் ..", " அடியளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு" என்று கூறுவதிலும் இறைவனை அதுவும் திருமாலை உணர்த்துகிறார். "அடி அளந்தான்" என்பது திருமால். ஆண்டாள் கூட "அன்று  இவ்வுலகம்  அளந்தாய் அடி போற்றி " என்று திருமாலை வழி படுகிறாள்.

"விசும்புளோர் கோமான் இந்திரனே சாலும் கரி" என்று வள்ளுவர் கூறும் போது தேவர்களின் தலைவன் இந்திரன் என்று இந்து மதத்தின் நம்பிக்கையை வலியுறுத்துகிறார். 
   
விதி ( ஊழ் வினை ) பற்றி வள்ளுவர் :

விதி ( ஊழ் வினை ) என்பது இந்து மதத்தில் ஒரு பெரிய நம்பிக்கை. அதை வலியுறுத்தும் விதமாக,
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்" என்று விதியின் வலிமையை உணர்த்துகிறார். இதையே சமஸ்கிருதத்திலும் "பிராரப்த கர்மம்" - " प्रारब्ध कर्मा - என்று உணர்த்தப்படுகிறது.

விதியையும் மீறி ஒருவன் முயற்சி செய்தால் அவன் வெற்றி பெறலாம் என்பதை, 
"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்" என்று குறிபிடுகிறார். 

இந்து மதத்தில் மறு பிறப்பு பற்றிய நம்பிக்கை மிகவும் இன்றியமையாதது.

மறு பிறப்பு பற்றி வள்ளுவர்:

ஒருவன் தன்  ஒரு பிறவியில் கற்ற கல்வி அவனுக்கு 7 பிறவிகளிலும் நன்மை பயக்கும் என்பதை ,
"ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமைக்கும் ஏமாப்புடைத்து" என்று அறிவிக்கிறார்.

இந்து மதத்தில் பசு மாட்டிற்கு மிகுந்த ஏற்றம் உண்டு. கோமாதா என்று பசு மாடு தெய்வமாகப் போற்றப்படுகிறது.இதனை,  
"ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு இரப்பின் இளி வந்தது இல் " என்று பசுவிற்க்கு நீர் வேண்டும் என்றாலும் யாசித்தல் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.

நீத்தார் கடன் ( முன்னோர் கடன் ) பற்றி வள்ளுவர் :

"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் ..." என்று, தென் புலத்தார் எனும் இடத்தில், தெற்கு திசையில் வசிக்கும் மக்கள் ( தெற்கு திசை யமன் இருக்கும் திசை என்பது தமிழ் மரபு ) அவர்களுக்கு உணவு அளித்து அதன் பின் தான் கடவுளுக்கும் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.இதுவும் இந்து மத நம்பிக்கையே.

இந்து மதத்தில் அந்தணர்களுக்கு சிறப்பான இடம் உண்டு. 
அந்தணர் பற்றி வள்ளுவர் :

"ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்" என்று அறு  தொழிலோர் என்று அந்தணர்களை குறிப்பிடுகிறார். மேலும், ஒரு நாட்டின் அரசன் சரியாக ஆட்சி புரியவில்லை என்பதை அந்த நாட்டின் பசு மாடுகளின் பால் வளம் குறைவதாலும், அந்தணர்கள் தங்கள் நூலான வேதத்தை மறப்பதாலும் உணரலாம் என்று கூறுகிறார். ( தற்போது இவை இரண்டும் நடை பெறுகின்றன. கழக ஆட்சிகளின் லட்சணம் தெரிகிறது ). 

"மறப்பினும் ஒதுக்கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்" என்று கூறும் போது, பார்ப்பான் ஒரு இழிச்சொல் இல்லை என்பதை அறிகிறோம். பார்ப்பனன் வேதம் ஓதுவதை மறந்தால் கூட பரவில்லை, ஆனால், அவன் தன் குல ஒழுக்க முறைகளை விட்டொழித்தால் எல்லா வகையான கேடுகளும் வந்து சேரும் என்று அறிவுறுத்துகிறார். 

"அந்தணன் என்போன் அறவோன் மற்றெவ்வுயிர்க்கும் 
செந்தண்மை பூண்டொழுகலான்" என்று கூறும் போது, அந்தணர்கள் எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் நடக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். 

பெண்கள் பற்றி வள்ளுவர் :

"தெய்வம் தொழாள் கொழுநன் கை தொழுவாள் பெய் எனப் பெய்யும் மழை" என்று, மனைவி கணவனை தெய்வம் போல் மதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். இது பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல் என்று நம் பகுத்தறிவாளர் முழங்குவர்.  

இப்படி பகுத்தறிவுக்கு உடன்படாத பல கருத்துக்களை உள்ளடக்கிய ஓர் நூல் திருக்குறள் என்பதால் தான் நமது ஆட்சியாளர்கள் மேலே கண்ட குறள்களை நமது பாடபுத்தகங்களில் இல்லாமல் செய்து தங்களின் சுயமரியாதை கொள்கையை நிலை நிறுத்தி, தமிழகத்தை இந்துதுவாவிடம் இருந்து காப்பாற்றினார்கள் என்று நாம் அறியலாம்.

வாழ்க பகுத்தறிவு ! வளர்க பகுத்தறிவாளர் பணி !


பி.கு:

பார்ப்பனன்  = பார்ப்பு + அனன் ( பறவையைப் போன்றவன் ) - உப நயனம் எனும் பூணூல் தரிக்கும் முன் ஒரு பிறவி, பூணூல் தரித்த பின் ஒரு பிறவி - ஆகையால் இரு பிறப்பாளர் என்று சங்க நூல்கள் கூறுகின்றன. ध्विजा என்று சமஸ்கிரதம் கூறுகிறது.

அறுதொழிலோர் = ஆறு தொழில்களை உடையவர்கள் ( வேதம் ஓதுதல், ஓதுவித்தல்,தானம் செய்தல், தானம் பெறுதல், யாகம் செய்தல், செய்வித்தல் ). शत्कार्मा निराधर என்று சமஸ்கிரதம் அறிவிக்கிறது.


இந்த பின்னூட்டம் ( blog ) 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆங்கிலத்தில் என்னுடைய இன்னொரு இணைய தளத்தில்  வெளி வந்தது.தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அதனை சுருக்கி தமிழ் ஆக்கம் செய்து தந்திருக்கிறேன்.

 http://indiainteracts.in/members/2007/02/26/Thirukkural-is-Saffron-RSS-literature-Come-let-us-BAN-it/




4 comments:

  1. Fantastic sir... Appa thirukural oru ulaga pothumurai illaiya?

    ReplyDelete
  2. Yes. If Ayyan were thought alike Amaruvi, Thirukkural no longer an 'ulagap podhumarai'. -- Saravanan Elangovan

    ReplyDelete
  3. Amaruvi Saan,
    Nice article! FYI. Also there are references to Lord Krishna as well. One such reference is a poem ending with - thaamarai Kannan Ulagu - under Enbathupal section.

    Ram

    ReplyDelete
  4. not only in thirukkural. nattrinai, paripaadal, pura nanooru, silappadhikaaram - all speak about hindu gods and especially andhanar. but these would be hidden by the eduction systm. i agree with thuis bloger.

    ReplyDelete